ஜெருசலேம்: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக என்எஸ்ஓ அமைப்பிடம் விசாரணையை தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனின் செல்போனும் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை பாரிஸ் சென்ற இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென்னி கன்ட்ஸ், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லியிடம் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று உறுதி அளித்தார்.