யானைகள் நடமாடும் வனத்தில் 15 கி.மீ. நடந்து சென்று மலைவாழ் மக்களிடம் குறைகேட்ட அமைச்சர்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிகனிக்கோட்டை அருகே யானைகள் நடமாடும் வனப்பகுதியில் 15 கி.மீ. நடந்து சென்று மலை கிராம மக்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறைகளை கேட்டறிந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மக்களை தேடி அதிகாரிகளுடன் திட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி- துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடகரை மலை கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, கிராமத்திற்கு போக்குவரத்து வசதி, குடியிருப்பு வசதி, பட்டா, 100 நாள் வேலை குறித்தும், போக்குவரத்து வசதி இல்லாததால் அவசர காலத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் தவிப்பிற்குள்ளதாகவும், பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வந்து செல்ல முடியாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாகவும் பொதுமக்கள் முறையிட்டனர்.

அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் துவக்க உள்ளதாகவும், மலை கிராமங்களுக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில் மக்களிடம் அடிப்படை வசதிகளை பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இரவு தங்கிய அமைச்சர், நேற்று காலை யானைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 15 கி.மீ. தூரம் நடந்து சென்று மூக்காங்கரை மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Related Stories: