மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் மனிகா பத்ரா (62வது ரேங்க்) தகுதி பெற்றார். தனது 2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரிடா பெசோட்ஸ்காவாவுடன் (33வது ரேங்க்) நேற்று மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், மனிகா 4-11, 4-11 என முதல் 2 கேம்களையும் இழந்து பின்தங்கினார். இதனால் தோல்வி நிச்சயம் என கருதப்பட்ட நிலையில், தனது வியூகங்களை மாற்றி கடும் நெருக்கடி கொடுத்த மனிகா 11-7, 12-10 என அடுத்த 2 கேம்களையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். 5வது கேமில் பெசோட்ஸ்கா 11-8 என வெற்றியை வசப்படுத்தி மீண்டும் முன்னிலை பெற்றார். எனினுன், மனம் தளராமல் உறுதியுடன் போராடிய மனிகா 11-5, 11-7 என கடைசி 2 கேம்களையும் கைப்பற்றி 4-3 என்ற கேம் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 57 நிமிடங்களுக்கு நடந்தது. இன்று தனது 3வது சுற்றில் ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவை வீழ்த்தினால், மனிகா கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறலாம்.