மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்..!

மும்பை: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கரையோர மாவட்டங்களான ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை மிகவும் மோசமானது.

அப்பகுதியில் உள்ள வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கிராமங்களும் சிறு நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து பெய்த மழையால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின. ரயில் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட தூர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டன. மழை வெள்ளத்தால் ராய்காட் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 36 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சதாரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேரை காணவில்லை. அதேபோல், வெள்ள நீர் சூழந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் பலரும் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: