மதுரை: ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகையை முன்னிட்டு சிறப்பு வசதிகள் செய்ய உத்தரவிட்ட உதவி கமிஷனரை, மதுரை மாநகராட்சி பணிகளில் இருந்து விடுவித்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். இவர் வரும் 26ம் தேதி வரை, மதுரை சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவரது வருகையை முன்னிட்டு சாலைகளை சீரமைத்து, தூய்மையாக வைக்குமாறு மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம் (பணியமைப்பு) நேற்று முன்தினம் ஒரு உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவர் செல்லும் சாலைகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டார். அவரது இந்த உத்தரவு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.