அரக்கோணத்தில் அதிகாலை விபத்து: தடுப்பு சுவரில் பஸ் மோதி 10 தொழிலாளர்கள் படுகாயம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் கம்பெனி பஸ் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனி பஸ் இன்று அதிகாலை அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் நோக்கி சென்றது. அரக்கோணம் விண்டர்பேட்டை ரயில்வே உயர் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலை தடுமாறிய பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: