பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 35க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஈராக்கில் பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஆடைகள், உணவு பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சடர் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலையில் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அப்போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நிகழ்விடத்திலேயே 35 பேர் பலியாகினர்.