புதுக்கோட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆட்டு சந்தை களைகட்டியது. ரூ.ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடு விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை சந்தை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில் ஆடு, மாடுகள் விற்பனை களை கட்டும். புதுக்கோட்டை மட்டும் அல்லாது திருச்சி, தஞ்சை உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து செல்வர். மேலும் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். கொரோனா ஆரம்பித்ததில் இருந்து சந்தையில் விற்பனை தடைபட்டு வியாபாரம் மந்தம் அடைந்தது. தற்போது அரசு பல தளர்வுகளை அறிவித்ததால் மீண்டும் சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 21ம் தேதி பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆட்டு சந்தைகளில் கூட்டம் களை கட்டி வருகிறது.