அனுமதி பெறாத ஆலைகள் மீண்டும் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!

மதுரை: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருக்கிறது. தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், அனுமதி பெறாத தொழிற்சாலைகளுக்கு மீண்டும் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என கடந்த 7ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இயற்கை நீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் அறிவிப்பாணையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அனுமதியின்றி செயல்படும் ஆலை, அமைச்சகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்ற ஒன்றிய அமைச்சகத்தின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளார்.

Related Stories: