மும்பை: ``உற்பத்தியை அதிகரிக்க அறுவடைக்கு பிந்தைய புரட்சி வேண்டும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி அடுத்த ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக தெரிவித்திருந்தார். இதனால், 2வது முறையாக அவரது தலைமையிலான பாஜ மத்தியில் ஆட்சி அமைத்ததும், அவர் 3 புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு 4 பேர் கொண்ட கமிட்டியை நியமிக்க உத்தவிட்ட உச்ச நீதிமன்றம், அதுவரை ஒன்றிய அரசு புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கியின் நிறுவன நாளான நேற்று பிரதமர் மோடி கூறியதாவது: கொரோனா தொற்று சவால்களுக்கு இடையேயும், முன் எப்போதும் இல்லாத வகையில் விவசாயிகளின் கடும் உழைப்பினால் விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரம், விவசாய உற்பத்தியை அதிகரிக்க, அறுவடைக்கு பிந்தைய புரட்சி, மதிப்பு கூட்டல் வேண்டும்.