20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை: ஒலிம்பிக்கில் ஆடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை..! நம்பர் 1 வீரர் ஜோகோவிச் பேட்டி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச் (34), 7ம் நிலை வீரரான இத்தாலியின் பெர்ரெட்னி (25) பலப்பரீட்சை நடத்தினர். சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த போட்டியில், ஜோகோவிச் 6-7, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மொத்தத்தில் விம்பிள்டனில் இது அவருக்கு 6வது பட்டமாகும். மேலும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். பட்டம் வென்ற ஜோகோவிச்சிற்கு 17.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது. பெர்ரெட்னி ₹9 கோடி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் தொடரில் தொடர்ச்சியாக 21 வெற்றிகளை ஜோகோவிச் பதிவு செய்துள்ளார். டென்னிசில் சக்கரவர்த்தியாக நிலைநிறுத்த அவருக்கு இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் தான் தேவை.

வெற்றிக்கு பின்னர் அவர் கூறியதாவது: நான் என்னை சிறந்தவன் என நம்புகிறேன், இல்லையெனில் கிராண்ட்ஸ்லாமை வெல்வது மற்றும் வரலாற்றை உருவாக்குவது பற்றி நான் நம்பிக்கையுடன் பேச மாட்டேன். நான் எல்லா நேரத்திலும் மிகப் பெரியவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த விவாதத்தை மற்றவர்களிடம் விட்டுவிடுகிறேன். டென்னிஸின் காலங்களை ஒப்பிடுவது மிகவும் கடினம். வெவ்வேறு சவால்கள், தொழில்நுட்பம், பந்துகள், மைதானங்கள் உள்ளன. எனவே 50 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இன்று வரை டென்னிஸை ஒப்பிடுவது மிகவும் கடினம். ஆனால் நிச்சயமாக அதன் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று நான் வழக்கமாக உணருவதை விட மிகவும் பதட்டமாக உணர்ந்தேன், குறிப்பாக  முதல் செட் முடிந்த பிறகு, எனக்கு நிம்மதி ஏற்பட்டது, ஒலிம்பிக் போட்டிக்கு எப்போதும் செல்வதே எனது திட்டம், ஆனால் இப்போது நான் கொஞ்சம் பிளவுபட்டுள்ளேன். அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. பெர்ரெட்னி அபாரமாக ஆடினார். அவருக்கான காலமும் கனியும். அதற்குண்டான தகுதி அவரிடம் இருக்கிறது என்றார்.

Related Stories: