கேரள வியாபாரிகள் வருகையால் வாழைத்தார் விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி  மார்க்கெட்டுக்கு நேற்று, வெளியூர் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக  இருந்ததுடன், கேரள மாநில வியாபாரிகள் வருகை காரணமாக விற்பனை  விறுவிறுப்புடன் நடைபெற்றது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு  பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் வாழைத்தார்  ஏலத்துக்கு,  சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி மற்றும்  புதுகோட்டை,  திருச்சி மாவட்டங்களிலிருந்து பலவகையான வாழைத்தார்கள்  விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கொரோனா  ஊரடங்கால் சில மாதமாக விற்பனை  மந்தமானது.

ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து, ஊரடங்கில் தளர்வுகள்  அறிவிக்கப்பட்டதால் காந்தி மார்க்கெட்டில் எடை மூலம் கிலோ கணக்கில் நடந்த  விற்பனையில் வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். சில  வாரமாக  உள்ளூர் பகுதியிலிருந்தே ஓரளவு வாழைத்தார் வரத்து இருந்தது.

இந்த  வாரத்தில் நேற்று நடந்த ஏலத்திலும், புதுகோட்டை உள்ளிட்ட வெளி  மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்களின் வரத்து அதிகமாக இருந்தது.உள்ளூர்  வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தாலும், கேரள மாநில வியாபாரிகள்  வருகையால்  ஏலம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.  இதில், செவ்வாழைத்தார் ஒரு  கிலோ ரூ.36வரையிலும், மோரீஸ் ரூ.17வரையிலும், கேரள ரஸ்தாளி ரூ.36  வரையிலும், பூவன் ரூ.20 வரையிலும், நேந்திரன் ரூ.36 வரையிலும் என கடந்த  வாரத்தைவிட தரத்திற்கேற்றார் போல் கூடுதல் விலைக்கு  விற்பனையானதாக  வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: