யானை வழித்தடம் விவகாரம் இழப்பீடு தொகையை குழுவிடம் கேளுங்கள்: கட்டிட உரிமையாளர்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: யானை வழித்தடம் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்ட விவகாரத்தில் ரிசார்ட்  மற்றும் நில உரிமையாளர்கள் தங்களுக்கான இழப்பீட்டை அமைக்கப்பட்டுள்ள  குழுவிடம் தான் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய  உத்தரவை எதிர்த்து, நீலகிரி ரிசார்ட் உரிமையாளர்கள் உட்பட பலர் தொடர்ந்த  மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில்  உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவையே மீண்டும் உறுதி செய்தது. மேலும், யானைகள்  வழித்தடத்தில் உள்ள கட்டடங்களை அகற்றும் பொழுது சட்டப்பூர்வமாக கட்டங்களை  வரைமுறை படுத்தவும், நிவாரணம் தொடர்பாக ஆராயவும் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு  பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் தனி குழு அமைத்துள்ளது.

      இந்நிலையில், இழப்பீடுகளை வழங்குவது உள்ளிட்ட சில விவகாரத்தில்  குழப்பங்கள் இருப்பதாக கூறி விளக்கம் கேட்டு ரிசார்ட் மற்றும் கட்டிட  உரிமையாளர்கள் ஆகியோர் சிலர் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச  நீதிமன்றத்தின் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இது தொடர்பாக உச்ச  நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை தெளிவான உத்தரவை  பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்குவதை எல்லாம்  பற்றி கூறுவதற்கு நாங்கள் ஒன்றும் நிபுணர்கள் கிடையாது. அதற்காக தான்  தனியாக குழு அமைக்கப்பட்டு. அங்கு சென்று தான் முறையிட்டு பெற்றுக் கொள்ள  வேண்டும்,’ என தெரிவித்தனர் விசாரணையை அடுத்த வாரத்திற்கு  ஒத்திவைத்தனர்.

Related Stories: