ஒலிம்பிக்சில் பங்கேற்கும் முதல் திருநங்கை

ஆக்லாந்து: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற பெருமையை நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட் பெற உள்ளார். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரைச் சேர்ந்தவர்  லாரல்  ஹப்பார்ட் (43). ஆக்லாந்து  மாநகர முன்னாள் மேயரின் மகனாக  கெவின் ஹப்பார்ட் என்ற பெயரில் பிறந்தவர்.  சிறு வயது முதலே பளுதூக்கும்  விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றார். பெண்ணுக்கான  இயல்புகள்  இவரிடம் இருந்தாலும் 2013ம் ஆண்டு வரை  ஆடவர் பிரிவிலேயே போட்டிகளில் கலந்து கொண்டார்.  பின்னர் தன்னை முழுமையான பெண்ணாக உணர்ந்ததால் அதற்கான  அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு 2015ல்   மகளிர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றார். 2017ல்  உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றார்.    இடையில்  கை  உடைந்ததால் 2018ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

 அவ்வளவுதான் என்று நினைத்த நிலையில்தான் 2019ல்  பசிபிக் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். தற்போது ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 87 கிலோ எடை பிரிவில்  பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற  லாரலுக்கு வாயப்பு உள்ளதாக நியூசி. ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அதற்கு சில தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும் எழுந்தது.  இந்நிலையில்  ‘ஒலிம்பிக் போட்டியில்  நியூசிலாந்து சார்பில் லாரல் பங்கேற்பார்’ என்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில்  முதல் முறையாக பங்கேற்கும் திருநங்கை என்ற பெருமை லாரலுக்கு கிடைக்க உள்ளது. எதிர்ப்பு இருந்தாலும், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மோசமான காமெடி

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  பளுதூக்கும் வீராங்கனை  அன்னா வான்பெல்லிங்கன், ‘டோக்கியோ ஒலிம்பிக்சில் மகளிர் பிரிவில் லாரலை பங்கேற்க அனுமதிப்பது, மற்ற பெண்களுக்கு  இழைக்கப்படும் அநியாயம்.  இது மோசமான நகைச்சுவை போன்றது’ என்று பொருமியுள்ளார்.

Related Stories: