பீஜிங்: சீனாவில் புதிய அணுசக்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயல்படும் புதிய அணுமின் நிலையத்தில் கடந்தவாரம் அணுக்கதிர் வீச்சு கசிந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த அணுமின் நிலைய கட்டமைப்பில் பிரெஞ்சு மின் குழுவின் பங்களிப்பு சுமார் 30 சதவீதம் வரை உள்ளது. அணுக்கதிர் வீச்சு கசிவு குறித்து ஈ.டி.எஃப் விசாரணையை தொடங்கியுள்ளது. இருப்பினும், கசிவின் அளவு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கொடுக்கப்படவில்லை. அணுசக்தி விபத்தை மறைக்க சீனா முயற்சிக்கிறது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் செர்னோபில் நடந்த சம்பவத்தை போன்று, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் சீன மக்களிடம் உள்ளது. இந்நிலையில், புதிய அணுசக்தி நிலையத்தில் விபத்து நடந்த 10 நாட்களுக்குப் பிறகு, அணுசக்தி விஞ்ஞானி ஜாங் ஜிஜியன் மர்மமாக இறந்துள்ளார். உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக என்று கூறப்படுகிறது. இவர், ஹார்பின் பொறியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். பேராசிரியர் ஜாங் இறந்த செய்தியை பல்கலைக்கழகத்தின் வெய்போ வெளியிடப்பட்டுள்ளது. ஜாங்கின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதாகவும், நடந்த சம்பவம் கொலை அல்ல என்றும், தற்கொலையாக இருக்கலாம் கூறப்பட்டுள்ளது.