காவலரை தாக்கி செயின் பறிப்பு அதிமுக பிரமுகர் மீது வழக்கு

பெரம்பூர்: நுண்ணறிவு பிரிவு காவலரை தாக்கி, செயின் பறித்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பால்பண்ணை ஆவின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு முத்தமிழ் நகரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து இரவு 8 மணி அளவில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது,  முத்தமிழ் நகர் 2வது பிரதான சாலை அருகே போதையில் நின்று கொண்டிருந்த நபர், வெங்கடேஷின் பைக்கை காலால் எட்டி உதைத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர், பைக்கை நிறுத்திவிட்டு, அவரை கண்டித்துள்ளார்.

அப்போது, அந்த நபர் தகராறில் ஈடுபட்டு வெங்கடேஷை தாக்கி, அவர் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போதையில் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவரது பெயர் கார்த்திக் (37) என்பதும், அதிமுக வடக்கு கிழக்கு மாவட்ட மாணவரணி பகுதி செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: