நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சி முடிவு: இஸ்ரேல் புதிய பிரதமராக நப்தலி பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

ஜெருசலேம்: இஸ்ரேலில் புதிய பிரதமராக நப்தலி பென்னட் பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இஸ்ரேலில் கடந்த 2009ம் ஆண்டு முதல் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி 30 இடங்களில் வென்றது. தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும், அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதற்கிடையே, அங்குள்ள 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பெரும்பான்மை எண்ணிக்கையை தொட்டன. இந்த கூட்டணியை  யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி தொடரும் என்றும், முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தலி-பென்னட் (49), பிரதமர் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பென்னட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு செப்டம்பரில் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க  உள்ளவரும் வெளியுறவு துறை அமைச்சருமான யெயிர்லாப்பிட், “இஸ்ரேல் இந்தியா  இடையேயான உறவை முன்னேற்றுவதற்காக உங்களுடன் ஒன்றினைந்து பணியாற்றுவதற்காக  காத்திருக்கிறேன்”  என்றார்.

Related Stories: