ரூ. 43,000 கோடி முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களின் கணக்குகள் முடக்கம் எதிரொலி : அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவு!!

மும்பை : அதானி குழும நிறுவனங்களில் ரூ. 43,000 கோடி முதலீடு செய்துள்ள 3 வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கணக்குகளை என்எஸ்டிஎல் எனப்படும் தேசிய பங்குப்பத்திர கட்டுப்பாட்டு அமைப்பு முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 20% அளவுக்கு சரிவை சந்தித்தன.மொரீஷியஸ் நாட்டில் இயங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பெரும் முதலீடுகள் செய்துள்ளன. அதானி குழும நிறுவனங்களில் இவை ரூ. 43,500 கோடி அளவு பங்குகளை தன் வசம் வைத்துள்ளன.

இந்த நிலையில் அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்களின் கணக்குகளை மே மாத இறுதியில் தேசிய பங்கு பத்திர கட்டுப்பாட்டு அமைப்பு முடக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதானி குழுமத்தில் முதலீடு செய்த இந்த 3 நிறுவனங்களும் ஒரே விலாசத்தை கொண்டு இருப்பதுடன் இணையதளம் கூட சொந்தமாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் படி நன்மை பயக்கும் உரிமை தொடர்பான தகவல்களை போதுமான அளவில் வெளியிடவில்லை என்று கூறி 3 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

எதிர்மறையான இந்த செய்தியை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளில் அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலை 20% விழுக்காடு வரை சரிந்து காணப்பட்டது. அதானி என்டர்ப்ரைஸிஸ் 20%யும் அதானி போர்ட்ஸ் 19% பங்கு மதிப்பினையும் இழந்தன. கடந்த வாரம் அதானி என்டர்ப்ரைஸிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ. 1600க்கும் மேல் இருந்த நிலையில், 48 மணி நேரத்தில் அது ரூ.1,200 ஆக சரிந்துவிட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: