புதுவீடு கட்டி ஓராண்டுக்குள் கடன் பிரச்னை; போதை பொருள் வியாபாரி குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை: மனைவி, இரண்டு குழந்தைகளும் மரணம்

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தில் கடன் பிரச்னையால் போதை பொருள் வியாபாரி மனைவி, 2 குழந்தைகளுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் அடுத்த கச்சா கத்ரா பகுதியில் போதைப்பொருள் வியாபாரி அகிலேஷ் குப்தா (43) குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த தீபாவளியன்று, இப்பகுதியில் புதிய வீடுகட்டி குடிபெயர்ந்தார். இவருக்கு ரிஷு (40) என்ற மனைவியும், 12 வயது மகன் சிவாங், 6 வயது மகள் அபிஜீதா ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில், சம்பவ நாளன்று பால் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு அகிலேஷ் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் வீட்டின் கதவு மூடப்பட்டது. நேற்று மதியம் 1 மணியளவில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் அகிலேஷின் வீட்டிற்குச் சென்றார். உள்தாழிட்டு மூடப்பட்டிருந்த வீட்டின் கதவை தட்டினார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர், வீட்டின் பின்புறமுள்ள பாத்ரூம் வழியாக குரல் கொடுத்தார். அப்போதும், கதவுகள் திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர், மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அகிலேஷின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் தரைத்தளத்தில் மருந்துக் கடையின் சுவற்றில் ஏறி பார்த்த போது, அகிலேஷ் மற்றும் அவரது மனைவி ரிஷு ஆகியோர் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தம்பதியின் மகள் அபிஜீதாவும், மகன் சிவாங்கும் பூஜை அறையின் பின்னால் முற்றத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். தகவலறிந்த போலீசார், விரைந்து வந்தனர். மேலும், 4 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த மேஜையின் மீது அகிலேஷ் எழுதிய தற்கொலை குறிப்புக் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘கடன் பிரச்னை இருப்பதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். என் உறவினர்களும், நண்பர்களும் மன்னித்துக் கொள்ளுங்கள்’என்று எழுதப்பட்டிருந்தது.

புதுவீடு கட்டி குடிபுகும் முன் பரேலியில் உள்ள ஃபரித்பூரில் வசித்து வந்தார். கடன் வாங்கி வீடு கட்டியது மற்றும் போதை பொருள் விற்பனையில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களால் நிதி நெருக்கடியில் அகிலேஷ் சிக்கியிருக்கலாம் என்றும், அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: