உருமாறிய ‘பி.1.617’ வகை கொரோனா: இந்திய வைரசின் பெயர் ‘டெல்டா’..! உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசின் பெயரை ‘டெல்டா’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் புதுசு புதுசாக கிளம்பி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் ‘பி.1.617’ என்ற வகையை சேர்ந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617’ வகை கொரோனா வைரசுக்கு ‘டெல்டா’ என பெயரிட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ‘ஆல்பா’ எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ‘பீட்டா’  எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை ‘காமா’ எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ‘எப்சிலான்’ எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

Related Stories: