கொரோனா 2வது அலைக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு: ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி:  இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலைக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு  என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் ராகுல்காந்தி வீடியோகான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகிலேயே கொரோனா தடுப்பூசியின் மூலதனமாக இந்தியா இருந்து வருகிறது. பிரதமர் மோடி  தலைவராக இருக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. அனைவருக்கும் தடுப்பூசியை  வழங்க முடியும் என்பதை அவர் காண்பிக்க வேண்டும்.

நான் புரிந்துகொண்டவரை தற்போதுள்ள கொரோனா தடுப்பூசி போடப்படும் சதவீதத்தை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கிறது. தற்போதைய நிலையில் 50-60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 18-44 வயதினர்களில் வெறும் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. இதே போன்ற மந்தமான நிலை தொடர்ந்தால் நிச்சயம் மூன்றாவது அலை மட்டுமல்ல, நான்காவது, ஐந்தாவது கொரோனா அலையை கூட நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.

தற்போதைய தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தின் அடிப்படையில் மே 2024ல் தான் அந்த பணி நிறைவடையும். அதற்குள் கொரோனாவின் பல அலைகள் வந்துவிடும். ஊரடங்கு, முககவசம், சமூக இடைவெளி இவை அனைத்தும் தற்காலிக தீர்வு மட்டும் தான். கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டும் தான் நிரந்தர தீர்வு. பிரதமர் மோடியும் மத்திய அரசும் வைரசை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களிடம் வைரசுக்கு எதிரான எந்த திட்டமும் இல்லை. 2வது அலைக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும். இது அவரின் நாடகம் மற்றும் பொறுப்பின்மையின்  விளைவால் ஏற்பட்டதாகும். இவ்வாறு ராகுல் காந்தி  தெரிவித்துள்ளர்.

டிசம்பருக்குள் தடுப்பூசி

ராகுலுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,” நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்வது, 108 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்த திட்ட வரைபடத்தை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வழங்கியிருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் கொரோனா குறித்த அச்சத்தை உருவாக்கும் ராகுலின் முயற்சியானது காங்கிரஸ் தான்  டூல்கிட் தயாரித்துள்ளது என்பதை உறுதிபடுத்தி உள்ளது” என்றார்.

Related Stories: