மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்த 14வது ஐபிஎல் சீசனில், அஸ்வின் பாதியில் வெளியேறினார். அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து விலகினார். இது குறித்து அஸ்வின் கூறுகையில், சென்னையில் நான் வசிக்கும் பகுதியில், பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என்னுடைய சகோதரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நான் ஐபிஎல் தொடரின் போது 8-9 நாட்களாக தூங்கவில்லை. தூக்கமின்றி போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் நான் ஐபிஎல்-ல் இருந்து விலகலாம் என முடிவெடுத்தேன்.