அண்ணா நகர்: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த மருந்து கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வில்லிவாக்கம் பஸ் டெப்போ அருகே கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக சென்னை குடிமை பொருள் சிவில் சப்ளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று வில்லிவாக்கம் பஸ் டிப்போ அருகே சிவில் சப்ளை சிஐடி ஆய்வாளர் தன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ஜாபர் உசேன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்து வண்டியை சோதனை செய்தபோது அதில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.