திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடக்கரை அருகே கடந்த ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு கார் மோதியது. இதையடுத்து, பின்னால் வந்த காரில் வந்தவர்கள் தங்களிடம் இருந்த ரூ.20 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறி, ஒருவர் கொடக்கரை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் காரில் இருந்தது ₹3.50 கோடி பணம் எனவும், அது பாஜவின் தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்ட பணம் எனவும் தெரியவந்தது. கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்த பணம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் விநியோகிக்க இந்த பணம் கொண்டு வரப்பட்டுள்ளது.