சிவகிரி அருகே திருமணமான 2 ஆண்டுகளில் ஐ.டி. பெண் ஊழியர் மர்மச்சாவு-கொலையாளிகளை கண்டுபிடிக்க தந்தை புகார்

மொடக்குறிச்சி : சிவகிரி அடுத்த பாரப்பாளையம் அருகே உள்ள குமாரவலசை சேர்ந்தவர் ராவுத்குமார் (29). விவசாயி. இவரது மனைவி திவ்யபாரதி (24). கடந்த 2019ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ராவுத்குமார் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது படுக்கையில் திவ்யபாரதி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து திவ்யபாரதியின் பெற்றோருக்கு ராவுத்குமார் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த திவ்யபாரதியின் தந்தை நடராஜன் (62) மற்றும் அவரது உறவினர்கள் உடலை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திவ்யபாரதியின் தந்தை நடராஜன் சிவகிரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ‘‘திவ்யபாரதி திருமணத்திற்கு முன்பு பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தனது கணவர் தகராறு செய்து வருவதாக கூறினார். இதனை கேட்கச் சென்ற எனது மகன் மற்றும் மனைவி கண்முன்னே மகளை அடித்துள்ளார்.

தற்போது எனது மகளின் உடல் மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. எனவே எனது மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இது குறித்து சிவகிரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: