ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலை சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார். ஆனால், நோக்கம் நிறைவேறும் வரை தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முரண்டுபிடிக்கிறார். இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 10 நாட்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் ராணுவம், காசாவின் குடியிருப்பு பகுதிகளில் பீரங்கி குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலும் குழந்தைகள் பலியாகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல குழந்தைகள் கண்முன்னே தாயையும், குடும்பத்தையும் இழந்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.