டெல்லி: உலககோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட சுனில் சேட்ரி தலைமையி 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று கத்தார் புறப்பட்டுச் சென்றது. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் 2019ல் தொடங்கின. கொரோனா பரவல் காரணமாக 2ம் கட்ட போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன.இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட ஆட்டங்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற உள்ளன. ஈ பிரிவில் உள்ள இந்திய அணி ஜூன் 3ம் தேதி கத்தாரையும், ஜூன் 7ம் தேதி வங்கதேசத்தையும், ஜூன் 15ம் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது. அதற்காக சுனில் சேட்ரி தலைமையிலான 28 பேர் கொண்ட இந்திய அணி நேற்று மாலை கத்தார் புறப்பட்டுச் சென்றது. பயணத்திற்கு முன்னதாக தனிமையில் வைக்கப்பட்ட அணியினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.