பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20: அமீரகத்தில் நடத்த திட்டம்

கராச்சி: கொரோனா பரவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாகி்ஸ்தான் சூப்பர் லீக்(பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் போட்டியை  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(பிசிபி) திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஐபிஎல் போல், பாகிஸ்தானின் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. அந்தப் போட்டி தொடங்கியதில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பான்மையான ஆட்டங்கள் அமீரகத்தில்தான் நடந்துள்ளன.  இந்நிலையில் இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் கொரோனா தொற்று குறைந்ததால் பிஎஸ்எல் போட்டியின் 6வது தொடர் பிப்.20ம் தேதி தொடங்கியது. இந்நிலையில்  கொரோனா 2வது அலை அங்கு வேகமெடுக்க பிஎஸ்எல் ஆட்டங்கள்   மார்ச் 4ம் தேதியுடன் இடை நிறுத்தப்பட்டன.

கொரோனா பரவல் குறைந்தால்  ஜூன் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை எஞ்சிய  ஆட்டங்களை தொடர பிசிபி திட்டமிட்டிருந்தது. அதற்காக மே 23ம் தேதி 6 அணிகளும் கராச்சியில் கூடுவது என்றும், கொரோனா பரிசோதனை, 7 நாட்கள்  குவாரன்டைன், பயோ பபுள் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு, அங்கேயே ஆட்டங்களை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 ஆனால் இதுநாள் வரை அரசு அமைப்புகள் அதற்கு அனுமதி தரவில்லை. அதனால் திட்டமிட்டபடி அடுத்தமாதம் பிஎஸ்எல் ஆட்டங்களை  நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி அனுமதி கிடைக்காவிட்டால் எஞ்சிய பிஎஸ்எல் ஆட்டங்களை  அமீரகத்திற்கு மாற்றலாமா? என்று பிசிபி திட்டமிட்டள்ளது. அதற்காக அணி நிர்வாகிகளிடமும், விளம்பர நிறுவனங்களிடமும் பிசிபி இப்போது ஆலோசனை  மேற்கொண்டுள்ளது.

Related Stories: