தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என்ற ஐகோர்ட்டின் கருத்து மிகவும் கடுமையானதுதான்: வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் !

டெல்லி: கொரோனாவை பரப்பியதற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது மிகவும் கடுமையானதுதான் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் என கூறினர். தேர்தல் நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் தவறில்லை என்றும் கடுமையாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் கூறிய கருத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்துள்ளது. மேலும், நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களை வெளியிடுவதற்கு ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து, இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம்  கொரோனாவை பரப்பியதற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது மிகவும் கடுமையானதுதான்.

சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதிகள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். மேலும்,  நீதிமன்ற விசாரணை நடைமுறையை செய்தியாக்க கூடாது என ஊடகங்களை கூற முடியாது. நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை பற்றி செய்தி சேகரிப்பதும் ஊடக சுதந்திரம் தான். இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: