புழல்: சென்னை மாதவரம், கொளத்தூர், லட்சுமிபுரம், ரெட்டேரி, விநாயகபுரம், புத்தகரம், சூரப்பட்டு, புழல், காவாங்கரை, மற்றும் புறநகர் பகுதிகளான செங்குன்றம், வடகரை, வடபெரும்பாக்கம், பாடியநல்லூர், நல்லூர், அலமாதி, பம்மதுகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இவ்வீடுகளின் கழிவுநீரை தனியார் நிறுவன லாரிகள் அதிக கட்டணம் பெற்றுக்கொண்டு எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் கழிவுநீரை பாடியநல்லூர் ஏரி மற்றும் மேம்பாலம், சென்னை கொல்கத்தா - தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் கொண்டு கொட்டுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, பாடியநல்லூர் ஏரி மாசடைந்து வருகிறது.