புதுடெல்லி: ‘நாடு முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உடனடியாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்,’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பால் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்தும் திரவ ஆக்சிஜன் போர்க்கால அடிப்படையில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், நிலைமையை சமாளிக்க ரயில், விமானங்கள் மூலமும் பல்ேவறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. எனினும், பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் உடனடியாக அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாடு முழுவதும் 551 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்.
இதன் மூலம், மாவட்ட அளவிலான ஆக்சிஜன் தேவையை இந்த உற்பத்தி யைங்களின் மூலமே பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த உற்பத்தி மையங்களுக்கான தொகை பிம் கேர் நிதியின் கீழ் வழங்கப்படும். இந்த மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.