எஸ்ஐ கணவர் மீது புகார் அளித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை நடிகைக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? போலீஸ் கமிஷனரிடம் நியாயம் கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட பெண்

சென்னை: எஸ்ஐ கணவர் மீது புகார் அளித்து ஓராண்டு ஆகியும் இன்று வரை நடவடிக்கை இல்லை என்று போலீஸ் கமிஷனரிடம் நியாயம் கேட்டு ஒருவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் பானுரேகா. இவர் சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் பிரபாகரன் பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தனக்கு துரோகம் செய்ததாகவும், மேலும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் படி இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட பானுரேகா தனது ஆதங்கத்தை வீடியோ மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு: ‘‘நான் கமிஷனர் முதல் இன்ஸ்பெக்டர் வரை புகார் அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. சென்னை நகர காவல்துறை பிரபாகரனுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. தன்னை 2வது திருமணம் செய்து அடித்து  கொடுமைப் படுத்துவதாக எஸ்ஐ வசந்த ராஜா மீது சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால் எனது புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நடிகைக்கு வந்தால் ரத்தம். எனக்கு வந்தால் அது தக்காளி சட்னியா. நடிகைக்கு ஒரு நியாயம், எனக்கு நியாயமா? நடிகை என்றால் கரிசனம் காட்டும் காவல்துறை சாதாரண பெண்ணான எனது புகாரை ஏன் அலட்சியப்படுத்துகிறார்கள் எனக்க நியாயாம் கிடைக்க வேண்டும். இவ்வாறு பானுரேகா தனது வீடியோ மூலம் கமிஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: