கொரோனா பரவலால் திருவிழாக்களுக்கு தடை: பூந்தோட்ட விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு...நிவாரணம் வழங்க கோரிக்கை

கண்ணமங்கலம்: தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பூக்களை பயிரிட்ட விவசாயிகளும், பூ வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கோடைகாலம் தொடங்கி விட்டாலே கிராமங்களில் அக்னி வசந்த விழா, மாரியம்மன் கோயில் திருவிழா, குல தெய்வ வழிபாடு உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். மேலும்,  திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாவிலும், திருமணமேடை அலங்காரத்திற்கும் பூக்கள்தான் பிரதானம். இதனை கருத்தில் கொண்டு தற்போதை சீசனில் விவசாயிகள் அதிகளவில் பூக்களை பயிரிடுவார்கள். இதன் மூலம் விவசாயிகளும், சிறு, குறு பூ வியாபாரிகளும் பலனடைவார்கள்.

இந்நிலையில், கொரோனா காரணமாக இந்த ஆண்டும்  கோயில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துகடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பயிரிடப்பட்ட பூக்களை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். கண்ணுக்கு அழகாய் பூத்து குலுங்கும் பூத்தோட்டம், கண்முன்னே அழிவதை பார்த்து விவசாய குடும்பத்தினர் செய்வது அறியாமல் கண்ணீர் சிந்தி நிற்கின்றனர். பூக்களை நம்பியுள்ள வியாபாரிகளும் தொழில்இழந்து வேதனையில் வாடுகின்றனர். எனவே, பூந்தோட்ட விவசாயிகளை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: