வாஷிங்டன்: ‘பாலியல் புகார் தரும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பதிலாக தொல்லை தருவோரை காப்பாற்றுவதை நிறுத்துங்கள்’ என கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு 500 ஊழியர்கள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.
உலகிலேயே பணி செய்திட மிகவும் சவுகரியமான நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் கருதப்படுகிறது. நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளை அந்நிறுவனம் வழங்குகிறது. ஆனாலும், பெண் ஊழியர்கள் பாலியல் பாதிப்புக்கு உள்ளாவதாக அடிக்கடி புகார் எழுவது கூகுளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், கூகுள் நிறுவன முன்னாள் பெண் பொறியாளர் எமி நியட்பெல்ட் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், ‘நான் பாலியல் புகார் கொடுத்த நபருடனே என்னை நேருக்கு நேர் மீட்டிங்கில் பங்கேற்க கூகுள் நிறுவனம் நிர்பந்தித்தது. அந்த நபர் என் பக்கத்து சீட்டிலேயே அமர்ந்து தொடர்ந்து பணி செய்தார். எனவே, தர்மசங்கடத்தில் வேலைவிட்டு வெளியேறினேன்,’ என கூறி உள்ளார்.