கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ராணிப்பேட்டையில் நுங்கு விற்பனை அமோகம்

ராணிப்பேட்டை: கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ராணிப்பேட்டையில் பனை நுங்கு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெயிலுக்கு பெயர் பெற்ற வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மிகச்சாதாரணமாக 108 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பழங்கள், பிரஸ் ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் உட்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் தேவை அதிகரித்து வருவதால் ஜூஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

செயற்கை பானங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும், இயற்கை அளித்த கொடையாக விளங்கும் பனை நுங்கிற்கு மக்களின் வரவேற்பு நிலையானதாக உள்ளது. பனை நுங்கு மிகவும் சுவையானது. கோடை காலத்தில் உடலுக்கு தேவையான நார்சத்துகள், நீர் சத்துகள் ஆகியவற்றை அளிக்கிறது. உடலின் கனிமச்சத்து, சர்க்கரை அளவு ஆகியவற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட நுங்கு உதவுகிறது. வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாக பனை நுங்கு உள்ளது.

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில்  ராணிப்பேட்டையில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பனை நுங்கு வாங்கிச் செல்கின்றனர். ஒரு நுங்கு ₹5க்கு விற்கப்படுகிறது. உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதால், குறிப்பிட்ட கோடை காலத்தில் மட்டுமே பனை நுங்கு கிடைக்கும்  என்பதாலும் விலையை பொருட்படுத்தால் பனை நுங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories: