மும்பை: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த தம்பதியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது 4வயது குழந்தை மீட்கப்பட்டு நண்பரின் பாதுகாப்பில் இருந்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி(32). இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் ஆர்தி(30).இதனை தொடர்ந்து ஐடி ஊழியரான அவர், 2015ம் ஆண்டு ஆகஸ்டில் தனது மனைவியுடன் அமெரிக்காவின் நியூஜெர்சியில் குடியேறினார். அவர்களுக்கு தற்போது 4வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த புதனன்று அந்த குழந்தை வீட்டின் பால்கனியில் நின்று நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றுள்ளனர். அப்போது இந்திய தம்பதியினர் தங்களது வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.