மும்பை: மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். இவர் மும்பையில் உள்ள பார்கள், விடுதிகளில் இருந்து மாதந்தோறும் ₹100 கோடி வசூல் செய்து தர வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டதாக மும்பை நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பரம்பீர் மனு தாக்கல் செய்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி ஆலோசனை வழங்கியது. இந்த மனு மீது விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றம், அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.