பென்னாகரம்: பென்னாகரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்து கடந்த 14 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிக்கு வந்தன. அங்கு கடும் வறட்சி நிலவி வருவதால், யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித் திரிந்து வந்தன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளில் ஒரு ஆண் யானை, கடந்த 14 நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியூர், ஒட்டனூர், நாகமரை, காட்டூர், நெருப்பூர், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. அங்குள்ள பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, ஏரியூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இந்த யானை, நெருப்பூர் கிராமத்திற்குள் புகுந்து 2 மாடுகளை தாக்கியது.