புதுடெல்லி: சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட அதிரடிப்படைவீரரின் புகைப்படத்தை நக்சல்கள் வெளியிட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 3ம் தேதி 1,500 பாதுகாப்பு படை வீரர்கள், பல குழுக்களாக பிரிந்து நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களின் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சண்டையின் போது, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வரும் ‘கோப்ரா’ சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த கமாண்டோ வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் காணாமல் போனார். அவரை பாதுகாப்பு படைகள் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் தங்களின் பிடியில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு நக்சல்கள் அறிவித்தனர். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்ட அவர்கள், அவரை விடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நடுவர் குழுவை ஏற்படுத்தும்படி சட்டீஸ்கர் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.