ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு கர்மாவில் இருந்து தப்பிக்க முடியாது: ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி:  ரபேல் ஒப்பந்தத்தில் இடைதரகருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக  வெளியான செய்தியை அடுத்து, மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.  ஆனால்,,  காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. 2019் மக்களவை தேர்தலின்போது ரபேல் ஊழல் பற்றி காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்தது.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகருக்கு ரூ.9.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பாஜ மறுத்து விட்டது.

இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கர்மா என்பது ஒருவரின் நடவடிக்கைக்கான பற்று, வரவை குறிக்கும் கணக்கு புத்தகமாகும். அதில் இருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது,’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: