தனுஷ்கோடி கடற்கரையில் துப்பாக்கி குண்டுகள் சிக்கின: கியூ பிரிவினர் தீவிர விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம், இலங்கை படகில் வந்த இலங்கையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டவர்கள் என்பதும், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க அங்கிருந்து படகில் தனுஷ்கோடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று காலை தனுஷ்கோடி சர்ச் கடற்கரை பகுதியில் கிடந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் டப்பா ஒன்றை கண்டெடுத்த மீனவர் ஒருவர், அதனை திறந்து பார்த்தபோது துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் குண்டுகள் இருந்தன. பதற்றமடைந்த அவர், உடன் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு சென்ற கியூ பிரிவினரிடம் துப்பாக்கி குண்டுகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த துப்பாக்கி குண்டுகளுடன் பிளாஸ்டிக் டப்பா கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியதா அல்லது வேறு யாராவது இதனை பத்திரப்படுத்தி வைத்திருந்து கடற்கரையில் போட்டு சென்றார்களா என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: