தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டி: பகார் சமான் 193 ரன் குவித்தும் பாகிஸ்தான் தோல்வி

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் பாக். வீரர் பகார் சமான் தனி ஆளாக நின்று போராடி 193 ரன் எடுத்தும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போய்விட்டது. பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜோகன்ஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 80 ரன், கேப்டன் பவுமா 92 ரன், வான் டர் டுசன் 60 ரன், மில்லர் 50 ரன் என 4 பேர் அரைசதம் எடுத்து அசத்தினர்.

இதன் காரணமாக தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்தது. மில்லர் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகார் சமான் எந்தவித அலட்டலும் இன்றி அதிரடி காட்டினார். அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் நாலாபுறமும் சிதறடித்தார். அவரது ஆவேச ஆட்டத்திற்கு மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  இடையில் பிரபலமான வீரரான பாபர் அசாம் மட்டும் தன் பங்கிற்கு 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பகார் சமான் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.

இறுதியில் 50வது ஓவரின் முதல் பந்தில் பகார்சமான் 193 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்சர், 18 பவுண்டரி அடங்கும். இறுதியில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 324 ரன்கள் மட்டுமே எடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்க அணிகள் 1-1 என சமனிலையில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நூர்ஜே 3 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தனி ஆளாக போராடி 193 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் பகார் சமான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நாளை மறுதினம் (7ம் தேதி) நடைபெறுகிறது.

பகார் சமான் சாதனை

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பாக். வீரர் பகார் சமான் 155 பந்துகளில் 193 ரன்களை குவித்ததன் மூலம் இரண்டாவதாக பேட் செய்து அதிக ரன்களை ஒரு நாள் கிரிக்கெட்டில் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்), தோனி 183 (நாட் அவுட்), கோலி 183 ரன்களை இரண்டாவதாக பேட் செய்தபோது ரன்களை குவித்துள்ளனர். இருப்பினும் பாக்கரின் போராட்டம் வீணானது.

Related Stories: