மதுராந்தகம் அருகே ஒரத்தி மலை பகுதியில் பதுக்கப்பட்ட 1596 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஒரத்தி மலையடிவாரத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கள்ளமார்க்கெட்டில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து வருகிறது. இதன்படி, அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்படி, அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

அந்த பகுதியில் சோதனை நடத்தியபோது ஒரத்தி மலையடிவாரத்தில் வயல்வெளியில் 896 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அங்கிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அன்னங்கால் கிராமத்தை சேர்ந்த தினகரன் (37), ஒரத்தியை சேர்ந்த சரவணன் (34), ஆதிகேசவன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுபோல், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்த மதுராந்தகம் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து 700 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூரில் 5030 குவார்ட்டர் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில், தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடந்த மதுவிலக்கு சோதனையில் மதுபட்டில்களை கடத்தியதாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 582 லிட்டர் கொண்ட 3203 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 346 லிட்டர் கொண்ட 1836 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: