திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று, கேரளாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பல்வேறு இடங்களில் நடந்த பேரணிகளில் பங்கேற்று, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவை திரட்டினார். மாலையுடன் பிரசாரம் முடிந்ததை தொடர்ந்து, அவர் திருவனந்தபுரத்துக்கு வந்தார். கேரளாவில் தற்போது பாஜ வசம் உள்ள ஒரே தொகுதியான நேமம் தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனால், இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளீதரனுக்கு ஆதரவாக ராகுல் பிரசாரம் செய்தார். மாலை 4.30 மணிக்கு பூஜாப்புரா மைதானத்தில் நடந்த மாநாட்டில் பேசினார். திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு, மாலை 6.30 மணிக்கு டெல்லி திரும்பினார்.