பணம் பதுக்கி இருப்பதாக வதந்தி; மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல்: தஞ்சை அருகே பரபரப்பு

பாபநாசம்: தஞ்சை அருகே ஒருவரது வீட்டில் மூட்டைகளில் பணம் பதுக்கியிருப்பதாக வந்த தகவலால் பறக்கும் படையினர் அந்த வீட்டில் சோதனையிட்டபோது மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் தான் கிடைத்தது. தஞ்சை அருகே பாபநாசம் அரசு பள்ளி அருகே ஒருவரது வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கிடப்பதாக மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனை நடத்த வந்த தகவல் அடிப்படையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் துணை தாசில்தார் ஹெலன் ஜாய்ஸ் தலைமையில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் சுகுமார் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனையிட்டனர்.

அப்போது அறையில் மூட்டைகள் இருந்தது. இதை பிரித்து பார்த்தபோது அதில் பணம் இல்லை. அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 13 சாக்கு பைகளை கைப்பற்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அவை எங்கிருந்து வாங்கப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: