வடக்கு ரோகினி பகுதியில் பயங்கரம் மனைவி, இரு குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்த பின் கணவர் தற்கொலை

புதுடெல்லி: டெல்லி போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றி வந்த ரோகினியை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி போக்குவரத்து கழகத்தில்(டிடிசி) ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் 31 வயது தீரஜ் யாதவ். இவர் தனது மனைவி ஆர்த்தி(28) மற்றும் ஹிடன்(6), ஆதர்வ்(3) என்கிற இரு மகன்களுடன் வடக்கு ரோகினி பகுதியில் உள்ள நாகர்பூர் கிராமத்தில் கூட்டுக்குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களுடன் வீட்டின் கீழ் தளத்தில் தீரஜின் பெற்றோர் வசித்து வந்தனர். முதல்தளத்தில் தீரஜின் மூத்தசகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தீரஜ் தனது மனைவி மற்றும் இரு மகன்களை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் காலையில் வீட்டின் ஜன்னல் வழியே தீரஜ்ஜின் தந்தை பார்த்தபோது தீரஜ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். பின்னர் அனைவரும் வந்து உடல்களை மீட்டனர்.

மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தி சமையலறையில் இருந்து போலீசார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் வசிாரணையை தொடங்கியுள்ளனர். தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, தீரஜ் தனது கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கியுள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: