ஓய்வு தேவை..! நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பல்வேறு அணியை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவை வேகப்பந்து வீச்சாளர் ஜேஷ் ஹேசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர், இன்னும் சிலநாட்களில் இந்தியாவுக்கு வந்து சென்னை அணியுடன் இணைந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 மாதங்களாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அடுத்த 2 மாதங்களுக்கு குடும்பத்துடன் சற்று ஓய்வெடுக்க விரும்புவதாக ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். டி 20 உலகக்கோப்பை தொடர், ஆஷிஸ் தொடர் உள்ளிட்ட போட்டிகளை கருத்தில் கொண்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக இந்த ஓய்வு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஹேசில்வுட்டிற்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: