மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா பிடியில் சிக்கி வரும் நிலையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாவது தொடர் கதையாகி உள்ளது. முன்னாள் வீரர்கள் பங்கேற்ற அந்த டி20 போட்டித் தொடர் ராய்பூர், மும்பை நகரங்களில் நடந்தது. இந்தியா கோப்பையை வென்ற அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வங்கதேசம் இலங்கை உட்பட ஆகிய நாடுகளும் விளையாடின. போட்டி முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரர்கள் ஒவ்வொருவராக கொரோனா பிடியில் சிக்கி வருகின்றனர். முதலில் அணியின் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.