ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 83 வயதான ஃபரூக் அப்துல்லாவுக்கு லேசான அறிகுறி தெரியவந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவலை ஃபரூக் அப்துல்லாவின் மகனும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் ( மார்ச் 2) ஃபரூக் அப்துல்லா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.