புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய நாடு தழுவிய பந்த்தினால், பஞ்சாப், அரியானாவில் ரயில் சேவை பாதித்தது. மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லி எல்லையில் உள்ள சிங்கு, காஜிப்பூர் மற்றும் திக்ரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 மாதங்கள் முடிந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி நாடு தழுவிய அளவில் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று பந்த் நடத்தினர்.